ஞாயிறு மாலை(ஜூன் 15) ஆரம்பித்து புதன் மாலை முடித்தேன்
தொடர்ச்சியாக படிக்க என் மனதால் இயலவில்லை. காட்சிகளை வர்ணிக்க வார்த்தைகளை உபயோக்காமல் சித்திரங்களால் கதைக்குள் இழுத்து பயணிக்க வைத்துள்ளார் Manu Larcenet
எங்கும் வறட்சி, உணவு உருவாக்கிட வழியில்லை, குடிக்க சுத்தமான தண்ணீர் இல்லை, வெட்ட வெளியில் படுத்து தூங்கிட பாதுகாப்பும் இல்லை, இப்படிதொரு உலகில் தன் மகனை ஜீவித்து வைப்பதும் மட்டும் இல்லாமல், சுயமாக வாழ வைக்கவும் விழைந்திடுகிறார் இங்கே ஒரு தந்தை. பெயர்கள் ஒரு பொருட்டாய் இல்லை
மனிதன் உருவாருக்கி பெருமையாய் நின்ற கட்டிடங்கள், பொருட்கள் சீந்தாவாரற்று நிர்மூலமாகி கரிசலகளாக காட்சி அளிக்கின்றன். கதையிலும் குளிர், இக்கதையினை படித்திட்ட வேளையில் கொவையிலும் குளிர், அதனால் என்னமோ குளிரை உணர்ந்த மாதிரி இருந்தது😌😌😌
காட் பிராமிஸ் என்று அச்சிறுவன் தன் தந்தையிடம் சத்தியம் கேட்டபோது எங்கே இருந்து வந்தது இந்த நம்பிக்கை என ஒரு நிமிடம் ஸ்தம்பித்தேன். அவன் வயதில் ஓடியாடி விளையாட ஒன்றும் இல்லை, பொம்மை இல்லை, நண்பர்கள் இல்லை, அவனை உற்சாகமாக்கிட எதுவுமே இல்லை, எந்த நம்பிக்கையில் அவன் தந்தையிடம் அப்படியொரு வார்த்தையை உபயோகித்தான், அவன் தந்தை அவனிடம் இதற்கு முன்னர் தன் சத்தியத்தை காக்கும் பொருட்டு இதை சொல்லி இருந்தாலும், நம்பிக்கை இழக்காமல் அச்சொற்களை உதிர்த்த அவன் மனது. இங்கு இறை நம்பிக்கை பற்றி நான் கூற வரவில்லை, ஒரு சோதனை வந்தாலே, இறைவன் இருக்கிறாரா என கேட்கும் மனிதர்களிடையே, எதுவும் இல்லாத உலகில் நம்பிக்கை கொண்ட அச்சிறுவனின் மனது என்னை உலுக்கியது.
இரு பூட்டுகள் இக்கதையில் காட்டப்படுகிறது. ஒரு பூட்டு திறக்கப்படும் முன்னே, சிறுவனுக்கு ஏற்படும் எச்சரிக்கை உணர்வு, ஆபத்தை உணர செய்யும் நிலைக்கு வளர்ந்த விட்ட அவனது உள்ளூணர்வை காண்பிக்கிறது. இரண்டாவது பூட்டை திறக்கும் போகும் முன் பயத்தில் வேண்டாம் என சிறுவன் தயங்கி கெஞ்சி நிற்க, அவன் தந்தை அவனிடம் ஒன்று தந்திட்ட வலியால் ஒதுங்கி போக கூடாதென என சொல்லி, அதனை திறக்கிறார், நன்மையே பயக்கிறது. உணவுகளை சேமித்து வைத்த மனிதர்களுக்கு நன்றி சொல்லும் அவனின் மனம் வருடி செல்கிறது.
104 பக்கத்தில் ஒப்பிய அவன் கண்ணம், 105 பக்கத்தில் நன்கு சாப்பிட்ட பின் சதை போட்ட அவன் கன்னங்கள், சித்திரக்காருக்கு கைதட்டல்.
இந்த பூட்டுகள் போன்று தான் நம்மில் சிலர் முதல் முயற்சியில் தரும் வேதனைகளிலும் காயங்களிலும் இரண்டாவது முயற்சியை எடுப்பதில்லை.
உணவை பகிர்ந்திட தன் தந்தை மனதை சம்மத்திக்க வைத்திடும் போது, இந்த உலகில் புதிதாய் உருவாகிடும் தலைமுறையிடம் மானிடம் முற்றிலுமாக அழியாமல் தழைத்திருக்கும் என்ற நம்பிக்கையை தருகிறது.
143 - பக்கத்தில் அவன் தந்தை திருடிய நபரிடம் நடந்திட்ட விதத்தை ஏற்று கொள்ள இயலாமல் அவன் அழுத போது, அவன் அழுகை என்னையும் ஆட்கொண்டது , இந்த இடத்தில் சித்திரம் மிக அருமை, அவன் உள்ள குமுறல்களை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார் சித்திரக்கார் Manu. என்னால் சிறிது நேரத்துக்கு தொடர முடியவில்லை. அவர் அப்படி நடந்து கொண்டதும் எனக்கும் பிடிக்கவில்லை. அடுத்த பக்கத்தில் தந்தையை மசிய வைக்கும் வசனங்கள் பேசி அவரை நல்லது செய்ய வைக்கிறான். அவர் வேண்டுமென்றே செய்யவில்லை அவரது சூழ்நிலை என புரிதலுடன் பேசுவது மிக மிக அருமை. தன் தந்தை நல்லவர் என்ற பிம்பத்தை அவர் உடைக்காமல் இருந்தது நெஞ்சுக்கு இதம்.
பயணத்தை மீண்டும் தொடர்ந்திட போது அதுவரை இலைமறை காயாக இருந்த கொடூரத்தை காண நேரிடுகிறான் சிறுவன், தொடரவும் முடியாமல், கீழே வைக்கவும் முடியாமல் அடுத்தது என்ன பார்த்திடுவோம் என தொடர்ந்திட்டேன். கடல் கருப்பு வெள்ளையிலும் தந்தை தனயனுடன் ரசிக்க முடிந்தது, எதிர்பார்த்த பொலிவை இழந்துள்ளது என புரிந்து கொள்ள முடிந்தது. முடிவு நான் எதிர்பார்த்திடவில்லை, ஆனால் அவன் தந்தை அவனை தயார் படுத்தி உள்ளார் என்பது உறுதியாக தெரிந்தது.
வசனங்கள் இயல்பாக உணர்ச்சி பூர்வமாய் எழுதப்பட்டிருப்பது தந்தை மகனுக்குமான உரையாடல்களில் நம்மை ஒன்ற வைக்கிறது. "தம்பு" சகோதர்கள் சொன்னதுதான், நானும் ரசித்தேன். சாரி தம்பு ரொம்பவே மனதை கனக்க செய்தது. இறுதியில் அந்த தந்தை பேசிடும் வசனங்களில் மனம் கனத்து அழுகை வந்துவிட்டது.
விலை: 400
ஒரு தரமான மேக்கிங் இந்த புத்தகம்.. தன் காமிக்ஸ் வட்டத்தை நன்கு தெரிந்து வைத்து குறைவான விலையில் நிறைவான படைப்பாய் தந்துள்ளார், பதிப்பாரிசியர் திரு. விஜயன் அவர்கள்.



No comments:
Post a Comment